துவண்டு போனவர்களைத் துளிர்த்தெழச் செய்யும் தன்னம்பிக்கை வளர்க்கும் வலைபூ

Friday, November 18, 2011

வீழ்வேனேயாகினும் விடப்போவதில்லை

சரித்திரமே காத்திரு... சாவே வா...
மரணத்தைப் பொருட்படுத்தாது
சிகரத்தின் விளிம்பில்
தொற்றிக்கொண்டு நிற்கிறேன்.
விழுந்தால் விதையாவேன்.
எழுந்தால் கதையாவேன்.

காரியத்தில் உறுதி வேண்டும் என்கிற எண்ணம்
நெஞ்சில் கனன்றுகொண்டிருப்பதால்
கரணந் தவறுதலை நான்
கருத்தில் கொள்ளவில்லை.

அச்சுறுத்தும் ஆழத்தைக் கண்டு
புன்னகைத்துவிட்டேன்.
விரல் நுனியில் காத்திருக்கும்
வெற்றிக்கான முயற்சியில்
விடாமல் தொடர்ந்துகொண்டிருக்கிறேன் - இங்கெனக்கு
சாவும், சாதனையும்
அக்கம்பக்கத்தில். . .
விட்டால் சாவு,
தொட்டால் சாதனை

மயிரிழையில் உயிர்தப்பியே தீரவேண்டும்.
காரணம் எனக்கு வேண்டியது வெற்றி மட்டுமல்ல
கடந்துவந்த சோதனைகளுக்கும்,
அடிபட்ட ரணங்களுக்கும்,
சந்தித்த போராட்டங்களுக்குமான விடிவு.

முடியவே முடியாது என்று
முடிவாய்ச் சொன்னவர்களுக்கும்,
பைத்தியக்காரன் என்று
பரிகாசம் செய்தவர்களுக்கும்,
ஏனிந்த வெட்டி வேலையென
எள்ளி நகையாடியவர்களுக்குமான பதில்.

ஊக்கம் தந்தவர்களுக்கும்,
உடன் வந்து வழியனுப்பியவர்களுக்கும்,
கண்துயிலாது காத்திருப்பவர்களுக்குமான நம்பிக்கை.

கடைநிலை நொடிகள்.
உடலெல்லாம் வியர்வை
வியிறெறியப் பசி.
மூச்சை உண்டபடி
உயிர்பிடித்துக்கொண்டிருக்கிறேன்.
ஆயிரமடிகளின் உயர்ந்த வெளியில்
இதயத்தின் துடிப்பொன்று தான்
இடைவிடாமல் கேட்கும் ஒலி.

இந்தக் கணத்தைச் சந்திப்பேன் என்று
தெரிந்தே தான் துணிந்து வந்தேன்.
எக்கிப் பிடித்தால் என்ன ஆகுமோ தெரியாது.

நெஞ்சுரத்தோடு தொற்றிக்கொண்டிருக்கிறேன்.
சரித்திரமே காத்திரு. . .
சாவே வா. . .
உன்னைச் சாகடிக்க
எனக்கு இன்றோர் சந்தர்ப்பம்.
கர்ஜித்தபடி முன்னெழுந்துவிட்டேன். . .
நெஞ்சுரத்துடன்,
-தமிழ் வசந்தன்
 
பிரசுரிப்பதற்கு முன்புவரை பார்வையாளர்களின் எண்ணிக்கை: 210