துவண்டு போனவர்களைத் துளிர்த்தெழச் செய்யும் தன்னம்பிக்கை வளர்க்கும் வலைபூ

Monday, October 17, 2011

நெஞ்சுரம் மட்டுமே முக்கியம்



கடந்துபோகவேண்டியவற்றைக் கடத்தியாகவேண்டும். இருக்கவேண்டியவற்றைக் கடந்துவிடாதபடி நிறுத்தியாகவேண்டும்.



நீங்கள் இப்போது கஷ்டப்படுகிறீர்கள். கவலைப்படாதீர்கள். இதுவும் கடந்துபோம் என்று என்னிடம் ஒருவர் ஆறுதல் சொன்னார். நான் கேட்டேன் - இது கடந்து போகும் - சரி.

1. அதற்குமுன் நான் போய்விட்டால். . .
2. இது துன்பம் - கடந்துபோவது இருக்கட்டும். வருவதும் துன்பமாகவே இருக்குமானால் இது கடந்து போவதால் என்ன பயன்.
3. இனி இன்பம் வருமானால் அதுவும் கடந்து போய்விட்டால், கடந்துபோவதெல்லாம் நல்லதற்கல்லவே.

கடந்துபோகவேண்டியவற்றைக் கடத்தியாகவேண்டும். இருக்கவேண்டியவற்றைக் கடந்துவிடாதபடி நிறுத்தியாகவேண்டும்.
ஆறுதல் சொல்பவர்கள் எங்களை எழுந்து நடமாட வைக்கலாம். நீங்களே மூலையில் அமர்த்திச் செல்லலாமா என்று கேட்டேன். இனி எவரும் இதுவும் கடந்துபோம் என்ற வார்த்தைகளைச் சொன்னால் ஆறுதலடைந்துவிடுவார்கள் என்று எண்ணிவிடாதீர்கள்.

அறிவு, திறமை, உழைப்பு, விடாமுயற்சி, வைராக்கியம் - இதில் எதையும் விடாமல் உங்கள் இலட்சியத்தை நோக்கி இடைவிடாது பயணியுங்கள். இதை உங்களால் விரைவில் கடந்துவிட முடியும். கடந்துவிடும் என்று இருந்துவிட்டால், விடிந்தாலும் வாழ்வு இருண்டபடியே தான் கிடக்கும். கடத்திவிடுவேன் என்று தைரியத்தோடு நோக்கம் மாறாமல் வாழ்க்கையை நடத்திச் சென்றால், இருட்டில் அதிக நேரம் இருக்கத்தேவையில்லை. ஒளிநிரம்பிய வாழ்வை நீங்களே செய்ய முடியும். இருண்மையை மாற்றலாம். வறுமையை மாற்றலாம்.

போராடிய தழும்புகளும், உருவாக்கிய சரித்திரங்களும் இறந்தாலும் நம்மை மறவாமல் நினைவுகூறும். இழப்பேன் என்றாலும் நேர்மை பிறழாத பிடிவாதமும், இறப்பேன் என்றாலும் கொள்கை தவறாத வைராக்கியமும் என்றும் இருக்கவேண்டும். என்ன நேர்ந்தாலும் மாற்றிக்காட்டும் வரை துவண்டுவிடாமல் போராடுவதற்கு நெஞ்சுரம் மட்டுமே முக்கியம் என்று சொல்லிப்பாருங்கள். இனி அவருக்கு நீங்கள் ஆறுதல் கூறவேண்டியதன் அவசியமே இருக்காது.

-தமிழ் வசந்தன்